52
வற்கலையின் உடையானை
மாசு அடைந்த மெய்யானை
நற்கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
துயரானைக் கண்ணுற்றான்
வில் கையினின்று இடை வீழ
விம்முற்று நின்று ஒழிந்தான்
பரதனைப் பார்க்கிறான் குகன். மரவுரி உடுத்திக் கொண்டு, முகத்திலே வருத்தம் உடையவனாய், புழுதி படிந்த மேனியாய், கல்லும் கரைந்துருகும்படி துயர் வடிப்பவனாய் நின்ற பரதனைப் பார்க்கிறான்.
இதுவரை அவன் கொண்டிருந்த கருத்து மாறுகிறது.
‘ஆகா’ தவறு செய்து விட்டேன் என்று நினைக்கிறான். கலங்குகிறான், வில் அவன் கையிலிருந்து நழுவி விழுந்தது; முந்தின உறுதி குலைந்தது.
★★
வற்கலையின் உடையானை– மரவுரியை உடுத்தவனை; மாசு அடைந்த மெய்யானை– புழுதி படிந்த உடம்பு உடையவனை; நல்கலை இல்மதி என்ன– அழகிய கலைகள் இல்லாத சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை– ஒளி இல்லாத முகம் உடையவனை; கல் கனிய கனிகின்ற துயரானை– கல்லும் குழைந்து உருகும்படி பொங்கி வரும் துன்ப முடையானை; (பரதனை) கண்ணுற்றான்– கண்டான்; வில் கையினின்று இடை வீழ– வில் தன் கையிலிருந்து கீழே விழும்படி; விம்முற்று நின்று ஒழிந்தான்– கலங்கிச் செயலற்று நின்றான்.