பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


நம்பியும்‌ என்‌ நாயகனை
        ஒக்கின்றான்‌; அயல்‌ நின்றான்‌
தம்பியையும்‌ ஒக்கின்றான்‌;
        தவவேடம்‌ தலை நின்றான்‌
துன்பம்‌ ஒரு முடிவில்லை
        திசை நோக்கித்‌ தொழுகின்றான்‌
எம்பிரான்‌ பின்‌ பிறந்தார்‌
        இழைப்பரோ பிழைப்பு என்றான்‌.

ஆடவரில்‌ சிறந்த இவன்‌ எனது தலைவன்‌ இராமன்‌ போலவே இருக்கிறான்‌. பக்கத்தில்‌ இருப்பவனோ இலட்சுமணன்‌ போலவே இருக்கிறான்‌. தவக்‌கோலம்‌ தரித்துள்ளான்‌. அவனது துன்பத்திற்கு ஓர்‌ எல்லை இருப்‌பதாகத்‌ தெரியவில்லை. இராமன்‌ சென்ற தென்‌ திசை நோக்கித்‌ தொழுகின்றான்‌. இராமபிரான்‌ தம்பிமார்‌ தவறும்‌ செய்வரோ என்று நினைக்கிறான்‌ குகன்‌.

நம்பியும்‌– ஆடவரில்‌ சிறந்த இப்‌பரதனும்‌; என்‌ நாயகணை– எனது தலைவனாகிய இராமனை; ஒக்கின்றான்‌– ஒப்ப இருக்கின்றான்‌; அயல்‌ நின்றான்‌– அருகே நிற்கின்ற சத்துருக்கனன்‌; தம்பியையும்‌ ஒக்கின்றான்‌– இலட்சுமணனை ஒப்ப இருக்கின்றான்‌; தவ வேடம்‌ தலை நின்றான்‌– தவ வேடம்‌ மேற்கொண்டு உள்ளான்‌; துன்பம்‌ ஒரு முடிவு இல்லை– இவனுடைய துன்பத்துற்கு ஓர்‌ எல்லை இல்லை; திசை நோக்கி தொழுகின்றான்‌– இராமன்‌ சென்ற தென்திசை நோக்கி வணங்குகின்றான்‌; எம்பிரான்‌– எம்பிரானாகிய இராமனின்‌; பின்‌ பிறந்தார்‌– பின்னே தோன்றிய தம்பிகள்‌; பிழைப்பு இழைப்பரோ?– பிழை செய்வார்களோ? என்றான் குகன்‌.