பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


உடனே ஓர்‌ ஓடத்தின்‌ மீது ஏறிக்கொண்டு பரதனிடம்‌ வந்து அவன்‌ காலிலே விழுந்து வணங்குகிறான்‌ குகன்‌. பரதனும்‌ அவனைத்‌ தூக்கி, தந்தையை விட மிகுந்த மகிழ்ச்சியுடனே அணைத்துக்‌ கொண்டான்‌.

தான்‌ வந்த நோக்கத்தைக்‌ குகனிடம்‌ கூறினான்‌ பரதன்‌. பரதனைத்‌ தன்‌ ஓடத்தில்‌ ஏற்றிக்‌ கொண்டு மறுகரையில்‌ சேர்த்தான்‌ குகன்‌. குகனுடைய இனத்தார்‌ எல்லாரும்‌ பரதனுடைய படைகளைத் தங்கள்‌ ஓடங்களில்‌, ஏற்றிக்‌ கொண்டு மறு கரையில்‌ சேர்‌த்தார்கள்‌.

கரை சேர்ந்த பரதன்‌ குகனை நோக்கி அன்றிரவு இராமன்‌ எங்கே துயில்‌ கொண்டான்‌ என்று வினவினான்‌. அப்போது குகன்‌ இராமன்‌ துயில்‌ கொண்ட இடத்தைக்‌ காட்டுகிறான்‌.

அல்லை ஆண்டு அமைந்த மேனி
        அழகனும்‌ அவளும்‌ துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும்‌
        வெய்துயிர்ப்‌ போடும்‌ வீரன்‌
கல்லை ஆண்டு உயர்த்த தோளாய்‌!
        கண்கள்‌ நீர்‌ சொரியக்‌ கங்குல்‌
எல்லை காண்பளவும்‌ நின்றான்‌;
        இமைப்பு இலன்‌ நயனம்‌” என்றான்‌

இலட்சுமணன்‌ எங்கிருந்தான்‌? என்று கேட்டான்‌ பரதன்‌.

“கார்‌ முகில்‌ வண்ணனாகிய இராமனும்‌ சீதையும்‌ இங்கே உறங்க, கையிலே வில்‌ தாங்கி, கண்ணீர்‌ மல்க, அனல்‌ கக்கும்‌ பெருமூச்சுடன்‌ இரவு மூழுதும்‌ கண்‌ இமையாது காவல்‌ புரிந்தான்‌ என்றான்‌ குகன்‌.