55
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்– மலை ஒத்த தோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்த மேனி– இருளையும் வென்றதாக அமைந்த கருமேனி உடைய; அழகனும்– அழகனாகிய இராமனும்; அவளும்– சீதையும்; துஞ்ச– தூங்க; வீரன்– சுத்த வீரனாகிய இலட்சுமணன்; வில்லை ஊன்றிய கையோடும்– வில் தரித்த கையுடனும்; வெய்து உயிர் போகும்– வெம்மையுடைய பெரு மூச்சோடும்; கண்கள் நீர் சொரிய– கண்கள் தாரை தாரையாக நீர் சொரிய; கங்குல் எல்லை காண்பனவும்– பொழுது விடியும் வரை; நயனம் இமைப்பிலன்– கண் மூடாதவனாய் (சிறிதும் துயில் கொள்ளாமல்); நின்றான்– காவல் புரிந்து நின்றான்; என்றான்– என்று குகன் பரதனுக்குக் கூறினான்.
கார் எனக் கடிது சென்றான்;
கல் இடைப் படுத்த புல்லின்
வார் சிலைத் தடக்கை வள்ளல்
வைகிய பள்ளி கண்டான்;
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான்:
பருவரல் பரவை புக்கான்;
வார் மணிப் புனலான்; மண்ணை
மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்
கேட்டான் பரதன். மேகம் போல விரைந்து ஓடினான். இராமன் கற்கள் மத்தியிலே புல்லில் படுத்திருந்த இடத்தைக் கண்டான்; துடி துடித்தான்; கண்ணீர் வடித்தான். அப்படியே நிலத்தில் விழுந்து புரண்டான். அந்த இடத்தைக் கண்ணீரால் நனைத்தான்.
★★
கார் என– மேகம் என்று சொல்லும்படியாக; கடிது சென்றான்– விரைந்து சென்றான்; வார் சிலைத் தடக் கை