56
நீண்ட வில் ஏந்தியவனும்; பெரிய கைகளை உடையவனும்; வள்ளல்– வரையாது கொடுப்பவனும் ஆகிய இராமன்; கல் இடைப்படுத்த புல்லில் வைகிய பள்ளி கண்டான்– கல் இடையே பரப்பிய புல்லால் ஆகிய படுக்கையைக் கண்டான்; (கண்டு) பதைத்து– வருத்தமுற்று, அல்வருத்தம் தாங்க முடியாமல் துடித்து; பார் மிசை வீழ்ந்தான்– பூமியிலே விழுந்தான்; வார் மணிப் புனலால்– பெருகுகின்ற முத்துப் போன்ற கண்ணீரால்; மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்– தரையை நீராட்டும் கண் உடையவன் ஆனான்; பருவரல் பரவை புக்கான்– சோகக் கடலில் மூழ்கினான்,
இராமன் சென்று தங்கியிருக்கும் இடத்தைத் தனக்குக் காட்டுமாறு குகனை வேண்டினான் பரதன்.
குகனும் பரதனுடைய வேண்டுதலுக்கு இணங்கி, அவனை அழைத்துக் கொண்டு படைகள் பின் தொடர, சித்திரகூட பர்வதம் சேர்ந்தான்.
சித்திரகூட பர்வதத்திலே இராமனைக் கண்டான் பரதன். அவன் அடிகளிலே வீழ்ந்து வணங்கினான்; அழுதான்; அரற்றினான்.
இராமன் பரதனை தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆறுதல் மொழி பல கூறினான்.
பரதனும் ஒருவாறு தேறி அயோத்தியில் தசரத மன்னன் இறந்த செய்தியைக் கூறினான்.
தந்தை இறந்த செய்தி கேட்டான் இராமன்– பெரிதும் துன்புற்றான்; வசிட்டர் இராமனை அழைத்துக்கொண்டு மந்தாகினி ஆற்றின் கரை சென்று, இறந்து போன அரசனுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்தார்.
பிறகு எல்லாரும் இராமன் இருப்பிடம் சேர்ந்தனர்.