60
கம்பனின் அயோத்தியா காண்டம்
அயோத்தியா காண்டத்தைப் படிப்போர் முன் நிலைமாறிய கதாபாத்திரங்களை கொண்டு வந்து திறம்பட நிறுத்துகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பன். சூழ்ச்சியில் சிக்கிய சிற்றன்னை கைகேயியைக் காண்கிறோம்; தசரதனைப் போல நாமும் துடிக்கிறோம்; எதிர்பாராத ஏமாற்றம் எதிர் கொண்ட போதும், சமநிலை மாறாத இராகவனைப் போற்றுகிறோம்; உணர்ச்சிக் குவியலாகும் இலட்சுமணனைக் கண்டு வியக்கிறோம்; கல்யாணராமன் மரவுரி உடுத்து, வனம் புகுதலைக் கண்டு மனம் புழுங்குகிறாம். அவனைத் தொடரும் சீதாப் பிராட்டியாரின் பண்பை போற்றுகிறோம். இலட்சுமணனை அண்ணனுக்கு ஏவல் செய்யும் பணியாளனாக அனுப்பும் சுமித்திரையின் அருங்குணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம்; அன்புக்கு இலக்கணமாக விளங்கும் இராகவனின் தம்பி குகனுக்கு அறிமுகமாகிறோம்; மாறுபட்ட சூழ்நிலையில் தடுமாறும் பரதனைப் பார்க்கிறோம்; அண்ணனின் பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டு, இரகுவீரனுக்காக அரசு செலுத்தும் கொள்கை வீரன் பரதனை, சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
மாறுபட்ட அயோத்தி, நிலை மாறிவிட்ட கதா– பாத்திரங்கள், புதுப்புது சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கம்பன் தவிர வேறு யாரே சுவை குன்றாமல் சித்தரிக்கக் கூடும்?
அல்லல் தரும், அவலம் மிகுந்த இத்துன்பம் நிறைந்த மாய உலகைக் கடந்து, கரையேற்றுவான் இறைவன் என்ற கூற்றைக் குகன் மூலம் காட்டுகிறாரோ கம்பநாடன், அயோத்தியா காண்டத்தில்?