பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம் பன்னிரண்டு படலங்கள் கொண்டது. மொத்தம் 1196 பாடல்கள். இவற்றுள் இத் தொகுப்பில் எடுக்கப்பட்டுள்ள பாடல்கள் 133.

ஆரண்யத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறும் காண்டம் இது. விராதன் வதையில் தொடங்குகிறது. சபரி பிறப்பு நீங்கு படலத்தில் முடிகிறது.

சித்திரகூட மலையில் இருப்பது தெரிந்துவிட்டபடியால் இனிமேல் அயோத்தி மக்கள் அடிக்கடி வருவார்கள் என்று கருதினான் இராமன். எனவே அவ்விடம் விட்டு அகன்றான்; இளையவனுடனும் சீதையுடனும் தண்ட காரணியம் நோக்கிப் புறப்பட்டான்.

சூரிய குலத்தில் தோன்றிய மனுச்சக்கரவர்த்தியின் மகன் இட்சுவாகு. அவனுக்குப் புதல்வர் நூறு பேர் அந்த நூற்றுவரில் கடைப்பட்டவன் தண்டன் என்பவன். அவன் முரடன், துஷ்டன், தண்டிக்கத்தக்கவனாக இருந்தமையின் தண்டன் என்று அவனுக்குப் பெயர் வந்தது.

விந்திய மலைக்கும் சைவலமலைக்கும் இடையே உள்ள பகுதியைத் தனது ராஜ்யமாகக் கொண்டான் அவன். மதுமந்த நகரில் இருந்து அரசு செலுத்திவந்தான்.

ஒரு நாள் அவன் சுக்கிராச்சாரியார் ஆசிரமத்துக்குச் சென்றான். அவர் மகள் அரஜை என்பவள்மீது காமுற்றான். வலிந்து அவளைக் கற்பழித்தான். இதனை அறிந்த சுக்கிராச்சாரியார் அவனைச் சபித்தார். அதனால் அவனது நாடு பாழாகி அவனும் அழிந்தான். அந்த இடம் தண்டகவனம் என்று பெயர் பெற்றது.