பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii



இந்த வானமண்டலம் முழுவதும் சுற்றித் திரித்து எல்லாரையும் வருத்திக்கொன்ற கிலிஞ்சன் என்ற அரக்கனின் மைந்தனாகப் பிறந்தேன். நினது திருவடி தீண்டப்பெற்றேன். சாபம் நீங்கப்பெற்றேன்” என்று கூறித் தும்புரு எனும் கந்தர்வனாகி வானுலகு சென்றான்.

பிறகு இராமன் இலட்சுமணன் சீதை மூவரும் சரபங்கர் ஆசிரமம் சென்றனர்.

இராமனின் வருகைக்காக காத்திருந்த முனிவர் இராமனைத் தரிசித்து, எரியில் புகுந்து முக்தி எய்தினார்.

“எனது ஆசிரமத்துக்கு வரவேண்டும்; எனது ஆசிரமத்துக்கு வரவேண்டும்” என்று முனிவர் பலரும் அழைத்தனர். இவ்வாறு பத்து ஆண்டுகள் அவர்களுடைய ஆசிரமங்களிலே தங்கிவிட்டு இராமன் சீதையோடும் இலக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆசிரமம் சென்றான்.

முனிவர் மகிழ்ந்தார், அவர்களை வரவேற்றார். அங்கேயே இருக்குமாறு கூறினார். அஸ்திரங்கள் பல கொடுத்தார்.

அரக்கர்களை அழிக்கும் நோக்கத்துடன் வந்திருப்பதால் இன்னும் தெற்கே சென்று அவர்கள் வரும் வழியிலே இருப்பது நல்லது என்றான் இராமன்.

“நல்லது என்று அகஸ்தியரும் பஞ்சவடி எனும் இடம் பற்றிக் கூறி அங்கே சென்று வசிக்குமாறு கூறினார்.

பஞ்சவடி என்றால் ஐந்து ஆலமரங்கள் உள்ள இடம் என்று பொருள். இந்த இடம் அகண்ட கோதாவரிக் கரையில் நாசிக் அருகே உள்ளது. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள், வடம் என்றால் ஆலமரம் என்று பொருள்.