பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


கோதாவரி நமது நாட்டின் அழகியதொரு பெருநதி, எனவே புவியினுக்கு அணியாகி என்றார் கம்பர்.

ஆன்ற பொருள் தருவதாவது என்ன? சிறந்த மலைகளிலே உள்ள பொருள்களை அடித்துக்கொண்டு வருதல். அவ்வளத்தால் ஏராளமான விளைபொருள்களைக் கொடுத்து நாட்டின் செல்வம் பெருக்குதல். புண்ணிய நதி ஆதலால் தன்னிடை மூழ்குவோர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு விதமான புருஷார்த்தங்களையும் கொடுத்தல்.

விளை நிலங்களுக்கு வளம் தருவதால் புலத்திற்றாகி என்றார்.

அங்கே மலர்களின் குவியல் உண்டு. குளிர்ந்த சோலை தழைத்து இருக்கும். இளம் வாழை மரங்கள் உள. அவை கனி தரும், செந்நெல் உண்டு. தேன் வழியும் மலர்கள் உள்ளன. தெய்வத் தன்மை பொருந்திய காவிரியே என்று சொல்லத்தக்க ஆறும் உண்டு. திருமகள் ஒத்த சீதையுடன் விளையாட அன்னம் உண்டு. பெருநாரை உண்டு.

மக்கள் நீராடுவதற்காக நீர்த்துறைகள் ஆங்காங்கே பெற்று இருப்பதால் அவி அகத்துறைகள் தாங்கி என்றார்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் வழியே கோதாவரி நதி பாய்வதால் ஐந்திணை நெறி அளாவி என்றார்.

பளிங்கு போல் தெளிந்து இருப்பதால் அவியுறத்தெரிந்து என்றார்.

மிகவும் குளிர்ந்த தண்ணீருடையதாக இருப்பதால் தண் என்று ஒழுக்கம் தழுவி என்றார்.

ஆகவே, சான்றோர் தம் கவி போல் இருந்தது கோதாவரி எனும் நதி என்றார்.