பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



புவியினுக்கு அணியாய்–பூமிக்கு ஓர் அலங்காரமாய்; ஆன்ற பொருள் தந்து–சிறந்த பொருள்களைக் கொடுத்து; புலத்திற்கு ஆகி–நிலத்திற்கு உரியதாகி; அவி அகத்துறைகள் தாங்கி– நீராடுதற்குரிய துறைகள் உள்ளனவாய்; ஐந்திணை நெறி அளாவி–குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்கள் வழி சேர்ந்து; சவி உறத் தெளிந்து– செவ்வையாகத் தெளிந்து; தண் என்று ஒழுக்கம் தழுவி– குளிர்ந்த நல்ல ஒழுக்கம் கொண்டு; சான்றோர் கவி என–பெரியோர் செய்த கவி போல; கிடந்த–இருந்த; கோதாவரியை– கோதாவரி ஆற்றை; வீரர் கண்டார்–வீரர்களாகிய இராம லட்சுமணர் கண்டனர்.

கோதாவரி நதியைச் சான்றோர் கவிக்கு உவமை கூறுகிறார் கம்பர். எப்படி? புவியினுக்கு அணியாகி–பலவித அணிகள் பொருந்தியதாக விளங்கும் சான்றோர் கவி; உலகத்தினரால் கொண்டாடப்பெறும்.

ஆன்ற பொருள் தந்து–அறம் பொருள் இன்பம் வீடு என்ற சதுர்வித புருஷார்த்தங்களின் பெருமையை உணர்த்தும்; கற்பவருக்கு நுண் அறிவுபுகட்டும்–ஆராய்ச்சி செய்பவருக்கு மேலும் மேலும் புதியனவாகப் புலப்படத்தக்க பொருள் தரும்.

அவி அகத்துறைகள் தாங்கி–அகப்பொருள் இலக்கணங்கள் பொருந்தி இருக்கும்; ஐந்திணை நெறி ஆளாவி–குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய புணர்தல், இருத்தல், பிரிதல், இரங்கல், ஊடல் எனும் ஐவகை ஒழுக்கங்களும் உள்ளதாக இருக்கும்.

சவி உறத் தெளிந்து – மயங்க வைத்தல் என்ற குற்றத்துக்கு இடமில்லாமல் தெளிவாக நன்கு விளங்கச் சொல்லுதல் என்ற அழகுடையதாக இருக்கும்.