8
கதிர்வல்லி– காமவல்லி என்ற தெய்வ பூங்கொடி; மேனி நனி பெற்று– அழகியதொரு பெண் வடிவம் பெற்று; காமம் விளை நெறி– காமம் விளைவிக்கின்ற ஒழுக்கமும்; வாசத்தேனின் மொழி உற்று– வாசனை வீசும் தேன் மொழியளாகி; இனிய செவ்வி நனி பெற்று– கண்ணுக்கினிய அழகை நன்கு பெற்று; ஓர் மானின் விழிபெற்று– மானின் மருண்ட பார்வையுடன்; மயில் வந்தது என– மயில் போன்ற சாயலும் நடையும் கொண்டு; வந்தாள்– வந்தாள்.
○○
பூவிலோன் புதல்வன் மைந்தன்
புதல்வி; முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவனான
செங்கை யோன் தங்கை; திக்கின்
மா எலாந் தொலைத்து வெள்ளி
மலை எடுத்து உலக மூன்றும்
காவலான் பின்னை; காமவல்லியாங்
கன்னி என்றாள்.
அப்படி அவள் வருகிற போது அவளது சிலம்பு, மேகலை, ஆரம் முதலிய அணிகள் ஒலித்தன. அவள் தனது கூந்தலில் சூடியுள்ள மலரில் வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்தன. இவற்றால் யாரோ பெண் ஒருத்தி வருகிறாள் என்று அறிந்தான் இராமன். ஒலி வரும் வழியிலே பார்வையைச் செலுத்தினான். அவன் அருகே வந்தாள் சூர்ப்பணகை, வணங்கினாள். “யார் நீ? உன் ஊர் எது? உன் பெயர் என்ன? உன் உறவினர் யார்?” என்று கேட்டான் இராமன்.
அப்போது அவள் சொன்னாள்:
“பிரும்மதேவர் தமக்குத் துணையாக ஒன்பது பிரும்மாக்களைப் படைத்தார். அவருள் ஒருவர் புலஸ்தியர். அந்தப் புலஸ்தியரின் புதல்வன் விச்ரவசு. விச்ரவசுவின் மகள் நான்;