பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


முழவினில்– மத்தளத்தினின்றும்; வீணையில்– வீணையீனின்றும்; முரல்– ஒலிக்கின்ற; நல்யாழினில்– நல்ல யாழினின்றும்; தழுவிய– இசை தழுவிய குழலினில்– புல்லாங் குழலினின்றும்; சங்கில்– சங்க வாத்தியங்களினின்றும்; தாரையில் ஒழுங்காகத் தொடர்ந்து வரும்; எழுகுரல்– எழுகின்ற குரல்; இன்றியே– இல்லாமலே; என்றும் இல்லது– என்றும் இல்லாத; ஓர் அழுகுரல்– ஒப்பற்ற அழுகைக் குரல்; அன்று– அன்றைய தினம்; அவ் இலங்கைக்கு– அந்த இலங்கையில்; பிறந்தது– தோன்றியது.

மடித்த பில வாய்கள் தொறும்
        வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள்
        சுருக்கொள உயிர்ப்பக்
கடிதத் கதிர் வாள் எயிறு
        மின் கனல மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி
        “யாவர் செயல்?” என்றான்.

இலங்கையிலே

இராவணன் தனது சிங்காதனத்தில் வீற்றிருக்கிறான். மூக்கறுபட்ட சூர்ப்பணகை ஓடி வருகிறாள். அவன் முன் விழுந்து புரண்டு அழுகிறாள். கண்டான் இராவணன்; கொண்டான் கோபம். பல்லை நறநறவென்று கடித்தான்; உதட்டை மடித்தான்; அனல் கக்கும் பெருமூச்சு விட்டான். “மூக்கை அறுத்தவன் எவன்?” என்று இடிபோல முழங்கினான்.