91
வான மாதரோடு இகலுவர்
விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர்
இயக்கியர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர்
தொடர்குவர்; தொடர்ந்தால்
ஏனை நாகியர் அரு நடக்கிரியை
ஆய்ந் திருப்பார்.
***
இவ்வாறு தேவமகளிர் ஆடுதல் கண்டு அவருடன் போட்டியிட்டு நடனம் ஆடுவர் வித்யாதர மகளிர்; அப்படிப் போட்டியிட்டு ஆடும் மகளிருடனே யக்ஷ மகளிர் ஆடுவர்; அவரைத் தொடர்ந்து அரக்கியர் ஆடுவர்; எஞ்சிய நாகலோக நங்கையர் நாட்டியக் கிரியைகளைக் கவனிப்பர்.
***
(அப்படி நடனமாடும்போது) விஞ்சையர் மகளிர் — வித்தியாதரப் பெண்கள்; வானமாதரோடு — தேவமகளிருடன்; இகலுவர் — போட்டியிட்டு நடனம் ஆடுவர்; ஆன மாதரோடு — அப்படிப் போட்டியிட்ட வித்தியாதர மகளிரோடு; இயக்கியர் ஆடுவர் — யக்ஷப் பெண்கள் ஆடுவார்கள்; அவரை — அந்த யக்ஷ மகளிரை; சோனைவார் குழல் அரக்கியர் — கருமேகம் போன்ற நீண்ட கூந்தலை உடைய அரக்கியர்; தொடர்குவர் — தொடர்ந்து போட்டியிட்டு ஆடுவார்கள்; தொடர்ந்தால் — அவ்வாறு தொடர்ந்து ஆடுமிடத்து; ஏனை — எஞ்சிய; நாகியர் — நாகலோகப் பெண்கள்; அரு நடகிரியை ஆய்ந்திருப்பார் — நாட்டியத்துக்கு வேண்டிய அரிய கிரியைகளை ஆராய்ந்திருப்பர்.
**