பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மடங்கல் அரி ஏறும்
        மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி
        நனி மூதூர்
அடங்கரிய தானை அயில்
        அந்தகனது ஆணைக்
கடுந்திறலின் வாய் அனைய
        வாயில் எதிர் கண்டான்.

இத்தகைய இலங்கையின் புறநகரிலே தனியே நடக்கிறான் அநுமன். எப்படி நடக்கிறான்? துணை ஏதுமின்றி நடக்கிறான். பயந்து நடக்கிறானா? இல்லை; இல்லை. ஆண் சிங்கமும், மதம் பிடித்த மாபெரும் யானையும் வெட்கமடையும்படி நடக்கிறான். அப்படி நடந்து அந்நகரின் கோபுர வாயிலை அடைகிறான்.

***

மடங்கல் – பிடரி மயிர் மடங்கிய அரி ஏறும் – ஆண் சிங்கமும்; மதமால் களிறும் – மதங்கொண்ட பெரிய யானையும்; நாண – வெட்கம் அடையும்படி; தனியே நடந்து – துணை எவருமில்லாமல் தனியே நடந்து; புகுதும் – கம்பீரமாக அந்த மதில் அருகே செல்லும்; நம்பி – ஆடவரில் சிறந்த அநுமன்; அடங்கு அரிய – எண்ணிக்கையில் அடங்காத; தானை – அரக்கர் சேனை உடையதும்; அயில் அந்தகனது – சூலாயுதம் ஏந்திய இமயனுடைய ஆணை கடுந்திறலின் – கட்டளை தவறாத கொடிய வலிமை கொண்ட; வாய் அனைய – வாய்போன்ற; நனி மூது ஊர் – பெரிய பழமையான அந்நகரின்; வாயில் – கோபுர வாயிலை; எதிர்கண்டான் – எதிரில் பார்த்தான்.

***