பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


எதிரே வந்து வழிமறித்து நின்றது அவ்வுருவம், அஃது ஒரு பெண் உருவம்.

“அவள் யார்?”

அவ் இலங்கை மாநகர் காக்கும் தெய்வம். இலங்காதேவி என்னும் பெயர் உடையவள்.

ஐந்து நிறங்கள் கொண்ட ஆடை உடுத்திருந்தாள் அவள்? பாம்புகள் எல்லாம் கண்டு அஞ்சத்தக்க கருடனுடைய வேகம் கொண்டவள்; இரக்கம் என்பதே சிறிதும் இல்லாதவள்; அழகிய பொன்னாலான மேலாடை தரித்து இருந்தாள்; சங்கினின்று தோன்றிய அழகிய முத்துக்களை மாலையாக அணிந்திருந்தாள்.

கண்டோர் அஞ்சத்தக்க கால்களை உடையவள்; மழைக் காலத்து மாரிபோல் ஒலிக்கும் சிலம்பு அணிந்திருந்தாள்.

எட்டுத் தோள்கள் உடையாள் அவள்; நான்கு முகத்தாள்; உலகம் ஏழும் தொட்டுத் திரும்பும் ஒளிபடைத்த மார்பினள்; தீப்பொறி பறக்க நாற்புறமும் சுழலும் கண்கள் கொண்டவள்; மூவுலகங்களையும் முட்டித்தாக்கும் வலியுடையாள்; பொறுமையே இல்லாதவள்.

சந்தனக் கலவை பூசியிருந்தாள். தாரம் எனும் எடுத்தல் ஓசைக்கு ஒத்த குரலுடன் பேசுபவள் ; தேவதருக்களில் ஒன்றாகிய மந்தார மலர்களால் ஆன மாலை தரித்த மகுடத்தாள்.

"அறிவில்லாதவனே! இவ்வூரில் எவரும் செய்யத் துணியாத செயல் புரிந்தனை? அஞ்சினாயில்லை போலும்! கோட்டை மதில் தாவாதே! என் கோபத்துக்கு இரையாகாதே! போ! போ!' என்று அதட்டினாள் இலங்காதேவி.

“இவ்வூர் காணும் ஆசையினால் வந்தேன்; எளியேன்; இங்கு வருவதால் உனக்கு என்ன நஷ்டம்?” என்று மரியாதையாகக் கூறினான் அநுமன்.