பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

தேடினான் - சீதாபிராட்டி இருக்கும் இடத்தைத் தேடினான்.

***


வேரியும் அடங்கின;
        நெடுங்களி விளைக்கும்
பாரியும் அடங்கின;
        அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள்
        கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின;
        தொடங்கியது உறக்கம்!

அந்த நள்ளிரவிலே கள் குடிப்போர்தம் கும்மாளங்கள் அடங்கின; களியாடல்களுக்குரிய வாத்தியங்கள் எல்லாம் ஓய்ந்தன; பாடல்கள் அடங்கின; காரியம் செய்பவர்கள் காரியம் செய்தல் ஒழிந்தனர். மூன்று வகையான முரசும் ஓய்ந்தன. எங்கும் உறக்கம்.

***

வேரியும் அடங்கின - அந்த நடுநிசியிலே கள் குடிப்போர் தம் கும்மாளங்களும் அடங்கின; நெடுங்களி விளைக்கும் பாரியும் அடங்கின - நீண்ட களியாடல் விளைக்கின்ற வாத்தியங்களும் முழங்குவது ஒழிந்தன; பாடல் அடங்கியது - பாடல்களும் ஓய்ந்தன. கம்மியர்கள் காரியம் அடங்கினர் - தொழிலாளர் தம் தொழில் அடங்கினர்; மும்மைத் தூரியம் அடங்கின - மூன்று வகைத்தான முரசுகளும் முழங்குவது ஓய்ந்தன; உறக்கம் தொடங்கியது - எல்லாருக்கும் உறக்கம் வந்துவிட்டது.