பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123



“இற்றைப் போர் பெரும் சீற்றம்
        என்னோடு முடிந்திடுக
கற்றைப் பூங்குழலாளைச்
        சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு
        குரங்கு என்றால் முனைவீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக்
      குறையுண்டாம்” எனக் குறைந்தான்

போரிலே என்னைத் தூண்டிவிடும் இந்தக் கோபம் எனக்குள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும். சீதையைச் சிறை வைத்த கண்டகனை ஒரு குரங்கு வந்து போரிட்டுக் கொன்றது என்றால் அந்த இராமனின் போர்த் திறமைக்கு மாசு படரும் என்று எண்ணி சினம் அடங்கினான்.

***

இற்றைப் போர்ப் பெரும் சிற்றம் - போர் செய்வதாக இப்போது நான் கொண்ட கடுங்கோபம்; என்னோடு முடிந்திடுக - எனக்குள்ளே அழுந்திக் கிடக்கட்டும் பூங்கற்றைக் குழலாளை - அழகிய அடர்ந்த கூந்தலுடைய சீதா பிராட்டியை; சிறை வைத்த கண்டகனை - சிறையில் வைத்த கொடியவனை; ஒரு குரங்கு - ஒரு குரங்கானது; முற்ற - அவன் முடியும்படி; போர் முடித்தது என்றால் - போர் செய்த அழித்தது என்று சொன்னால்; முனை வீரன் - போர் வீரனாகிய இராமனின்; கொற்றப் போர் சிலைக்கு - வெற்றி தரும் போர்த் தொழிலுக்கு; குறை உண்டாம் - குறைவு ஏற்படும்; என - என்று எண்ணி; குறைந்தான் - சினம் அடங்கினான்.

“இனி, இங்கே நிற்பதால் யாதொரு பயனுமில்லை” என்று கூறி அந்த இராவணனின் அரண்மனை நீங்கி அப்பால் சென்றான் அநுமன்.