பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


“அரக்கரே ஆயினும் சரி; வேறு எவராயினும் சரி” என்று துணிந்தாள்.

“ஐயனே! அந்த இராமன் எப்படியிருப்பான் சொல்” என்று கேட்டாள்.

***


எய்தினன் - அநுமன் (வந்த நோக்கத்தை) உரைத்தலோடும் - சொன்ன அளவில்; (சீதை) பேருவகை எழுந்து ஏற - (மனத்திலே) பெருங்களிப்புத் தோன்றிப் பெருக - வெய்து உறல் ஒடுங்கும் மேனி - துன்பத் தீயால் வாடிய தன் உடம்பு; வான்உற விம்மி ஓங்க - பெருத்துப் பூரித்து உயர்ந்து; உய்தல் வந்து உற்றதோ - துன்பம் நீங்கி இயிர் பிழைக்கும் காலமும் எனக்கு வந்ததோ; என்று - என்று நினைத்து; அருவி நீர் ஒழுகு கண்ணாள் - அருவி நீர்ப் பெருக்கு போல கண்களில் இருந்து நீர் பெருக; ஐய - பெரியவனே! அனையன் மேனி - இராமனது திருமேனி; எப்படித்து? - எவ்வாறு இருக்கும்? அறிவி - சொல்வாய்; என்றாள்.


***

உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமனது திருமேனியை வர்ணிக்கிறான் அநுமன்.

பிறகு மாயமான் பின்னே சகோதரர் சென்ற நாள் முதல் அதுவரை நிகழ்ந்த எல்லாவற்றையும் விவரிக்கிறான்.

இராமன் கூறிய அடையாள வார்த்தைகளை எல்லாம் சொல்கிறான்.

சொல்லிய பின் இராமனின் கணையாழியைப் பிராட்டியிடம் அளிக்கிறான் அநுமன்.

***