பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மூவரும் அல்லன்; மற்றை
        முனிவரும் அல்லன்; எல்லைப்
பூவலயத்தை ஆண்ட
        புரவலன் புதல்வன் போலாம்.

அந்த வில்வீரன் தேவரும் அல்லன்; பிறரும் அல்லன்; திக்கஜங்கள் அல்லன்; அஷ்டதிக் பாலர் அல்லன்; கயிலை ஈசனும் அல்லன்; திருமூர்த்திகளும் அல்லன்; ஏனைய முனிவரும் அல்லன்; பூமியின் எல்லை வரை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் புதல்வன் ஆவான்.

***

(அந்த வில்வீரன்) தேவரும் - தேவர்களும்; பிறரும் - மற்றையோரும் அல்லன்; திசைக்களிறு அல்லன் - அஷ்டதிக்கஜங்களும் அல்லன்; திக்கின் காவலர் அல்லன் - திசைக் காவலரும் அல்லன்; ஈசன் கயிலையங்கிரியும் அல்லன் - கயிலையங்கிரி ஈசனும் அல்லன்; மூவரும் அல்லன் - மும் மூர்த்திகளும் அல்லன்; மற்றை முனிவர்களும் அல்லன்; வேறு முனிவர்களும் அல்லன்; எல்லைப் பூவலயத்தை ஆண்ட - நிலவுலகின் எல்லை எது உண்டோ அதுவரை ஆண்ட; புரவலன் - தசரத சக்கரவர்த்தியின்; புதல்வன் - மைந்தன்.

***

அறம் தலை நிறுத்தி வேதம்
        அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச்
        செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்து உக நூறித் தக்கோர்
        இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற் பாதம்
        ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.