பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



உற்றவர் எனக்கும் உற்றார்
        உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என்
        இன் உயிர்த் துணைவன்” என்றான்.

இராமன் கூறினான். யாரைப் பார்த்து? சுக்கிரீவனைப் பார்த்து. என்ன கூறினான்?

“இனிப் பல படப் பேசுவதில் பயன் என்ன இருக்கிறது? பற்பல வார்த்தைகள். கூறுவது எதற்கு? விண்ணிலும் சரி; மண்ணிலும் சரி. உனது பகைவர் எனது பகைவரே. தீயரே ஆயினும் உனது நண்பர் எனது நண்பரே. உனது உறவினர் எனது உறவினர். என் பால் அன்பு கொண்ட சுற்றம் உன் பால் அன்பு கொண்ட சுற்றமே. நீ என் இன்னுயிர்த் துணைவன்”. என்றான்.

***


இனி - இன்னும்; மற்று உரைப்பது - பல பல சொல்வது, என்னே -எதற்கு? வானிடை - விண்ணிலும்; மண்ணில் - மண்ணிலும்; உன்னைச் செற்றவர் - உன்னைப் பகைத்தவர்; என்னைச் செற்றார் - என்னைப் பகைத்தவர் ஆவார்: உன்னோடு உற்றவர் - உன்னோடு தோழமையுற்றவர்: தீயரே ஆயினும் தீய குணத்தினர் ஆனாலும்; எனக்கும் உற்றார் -எனக்கும் வேண்டியவரே. உன் கிளை - உனது உறவினர்; எனது - எனது கிளை; என் காதல் சுற்றம் - எனது அன்புக்குரிய சுற்றத்தார்; உனது அன்புக்குரிய சுற்றத்தினர் ஆவர். நீ என் உயிர்த்துணைவன் என்றான்.

***


இவ்வாறு பேசி இருவரும் நட்புக் கொண்ட உடனே இராமனை வணங்கினான். “அஞ்சனை சிங்கம். உங்கள் இருக்கைக்கு எழுந்தருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.