231
எய்துவான் - அழிவு அடையும் பொருட்டு; அறிவு நீங்கினான் - அறிவு நீங்கப் பெற்ற இராவணன்.
***
விபீடணன் வானத்து எழுகிறான். மீண்டும் கூறுகிறான்;
“நீ வாழ நினைத்தால், இராமனின் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேள், இல்லையெனின் அப்பிரானுடைய அம்பு உன்னையும், உன்னைச் சேர்ந்த அனைவரையும் அழித்துவிடும். என் குற்றத்தைப் பொறுத்தருள்க!” என இலங்கை விட்டு நீங்கினான்.
***
“எத்துணை வகையாயினும்
உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்;
உணரகிற்றலை;
அத்த! என் பிழை
பொறுத்தருளுவாய்” என,
உத்தமன் அந் நகர்
ஒழியப் போயினான்.
“எல்லா வகையாலும் உறுதி பொருந்தியனவும் நீதி நூற்கு ஒத்தனவுமான கருத்துக்களை எல்லாம் உனக்கு உணர்த்தினேன். ஆனால், அவற்றை நீ உணரும் ஆற்றல் அற்றவன் ஆனாய்; என் தந்தைப் போன்றவனே! (பெரியோனாகிய உனக்கு அறிவுரை கூறிய) என் பிழையைப் பொறுத் தருள்வாயாக!” என்று கூறிவிட்டுச் சிறந்த குண நலன்களை உடைய விபீடணன் அந்த இலங்கை நகரத்தை விடுத்துச் சென்றான்.
***