240
நெறி தரு மாருதி என்னும்
நேர் இலா
அறிவனை நோக்கினான்,
அறிவின் மேல் உளான்.
அறிவினால் எல்லோரினும் மேம்பட்டவனாகிய இராமன், அரசியல் நெறியனைத்தும் தெரிந்த,மாருதி என்ற ஒப்புவமை இல்லா அறிஞனை நோக்கினான். “பொருள் செறிந்த பெரிய கேள்வி அறிவுடையவனே! செய்ய வேண்டிய செயலைப் பற்றி எல்லோரும் ஒரு தன்மையராகக் கூறிவிட்டார்கள்; நின் கருத்து என்ன? சொல்லுக” என வினவினான்.
***
அறிவின் மேல் உளான் - உணர்ந்தார்க்கும் உணர முடியாதபடி யாவையும் கடந்து நின்ற பரம்பொருளான இராமன்; நெறி தரும் மாருதி என்னும் நேர் இலா அறிவனை - யாவர்க்கும் நன்னெறியைக் காட்டவல்ல காற்றின் மைந்தனான அநுமன் என்னும் ஒப்புயர்வற்ற ஞானியை; ‘செறி பெரும் கேள்வியாய் - பொருந்திய பரந்த கேள்வி ஞானமுள்ளவனே! உறுபொருள் யாவரும் ஒன்ற கூறினார் - செய்தற்குரிய காரியத்தைக் குறித்து யாவரும் ஒரு படித்தாக மொழிந்தார்கள்; (இனி, இவ் விபீடணனை ஏற்றுக் கொள்வதில்), கருத்து என் செப்பு, என - நீ கருதுவது சொல்வாயாக! என்ற கருத்துப் புலப்படுமாறு, நோக்கினான் - கண்ணால் பார்த்தான்.
***
அநுமனை இராமபிரான் விபீடணனைப் பற்றிய அபிப்பிராயம் கேட்டபோது அநுமன் தன் கருத்தினைக் கூறினான். விபீடணன் மற்றவர் கூறியதுபோல் தீயவன் அல்லன். இக் கருத்தினை அரக்கர்கோன் இராவணனின்