பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247



“ஈரேழு பதினான்கு உலகங்களும் என் பெயரும் உள்ள அளவும் இந்த இலங்கை ராஜ்யம் உனதே; உனக்கே அளித்தேன்.”

இவ்வாறு அருள் சுரக்க, மகிழ்ச்சி ததும்பக் கூறினான் இராமன்.

***

ஆழியான் - சக்கராயுதம் ஏந்திய திருமாலின் அவதாரமாகிய இராமன்; அவனை நோக்கி - விபீடணனை பார்த்து; அருள் சுரந்து - அருள் பொழிந்து; உவகை கூர - மகிழ்ச்சி பொங்க; ஏழினொடு ஏழாய் நின்ற உலகும் - இந்தப் பதினான்கு உலகங்களும்; என் பெயரும் - இராமன் என்னும் என் பெயரும்; எந்நாள் வாழும் நாள் - என்றுவரை நிலை நிற்குமோ; அன்றுகாறும் - அன்று வரை; வாள் எயிறு அரக்கர் - வாள்போல் கூரிய பற்கள் கொண்ட அரக்கர்; வைகும் - வசிக்கும்; ஆழ்கடல் - ஆழ்ந்த கடல் நடுவே உள்ள; இலங்கைச் செல்வம் - இலங்கை அரசும் செல்வமும்; நின்னதே - உனதே; தந்தேன்.

“மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசு
என்ற மின்னலங்காரன்”

—பெரியாழ்வார்.

விபீடணனுக்கு முடி சூட்டுமாறு இராமபிரான் லட்சுமணனைக் கட்டளையிட்டான். ஆனால் விபீடணன் ஒரு வரம் வேண்டினான். அது என்ன? இரகுவீரனின் தம்பி பரதனுக்குச் சூட்டிய மகுடத்தை தனக்கும் சூட்ட வேண்டும் என்று வேண்டினான்.

பரதனுக்குச் சூட்டிய மகுடம் இராமனின் பாதுகைகள். அதையே தனக்கும் வைக்கவேண்டுமென கேட்ட விபீடணனின் கருத்து யாது?