18
விண்மீன் கூட்டங்களை அத்தேன் அருவி இழுக்கும்; வானவில்லை இழுக்கும்; பிறைச் சந்திரனை இழுக்கும்; கிரகங்களை இழுக்கும்.
***
வான் இழுக்கும் - வானில் உள்ள தேவர்களையும் தன் நறுமணத்தால் இழுக்கும்; ஏல வாச நாறு குன்றமே - ஏலக்காய் மணம் கமழப் பெற்ற அக் குன்றிலே; தேன் இழுக்கு சாரல் வாரிச் செல்ல - தேன் அருவி சாரல் வழி பாய; மீது செல்லும் - ஆகாயத்திலே செல்கின்ற; நாள் மீன் இழுக்கும் - நட்சத்திரங்களை இழுக்கும்; அன்றி - அஃதல்லாமல்; வானவில் இழுக்கும் -வானவில்லை இழுக்கும்; வெண்மதிக்கூன் இழுக்கும் - பிறைச் சந்திரனை இழுக்கும்; கோள் இழுக்கும் - கிரகங்களை இழுக்கும்; என்பவால் - என்று சொல்வார்கள்.
***
இத்தகைய மலைச்சாரல் வழியே இராமன் லட்சுமணர், சுக்கிரீவன், அநுமன் முதலாயினோர் நடந்து வந்தனர். கிட்கிந்தையை அடைந்தனர். அப்போது இராமன் சுக்கிரீவனை நோக்கி, “வாலியை சண்டைக்கு அழை நீயும் வாலியும் சண்டை செய்கிறபோது நான் தனியே ஒரு புறம் ஒதுங்கி நின்று வாலி மீது அம்பு எய்து கொல்வேன்” என்று கூறினான்.
சுக்கிரீவனும் சம்மதித்தான். உரத்த குரல் எழுப்பினான். வாலியை அழைத்தான். பூமி அதிர நடந்தான். தனது வலிய தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
சூரிய குமாரனாகிய சுக்கிரீவனின் முழக்கம் என் செய்தது? உறங்கிக் கொண்டிருந்த வாலியை எழுப்பியது. பாற்கடல் போல் பள்ளிக் கொண்டிருந்த வாலி விழித்தான். பெரியதொரு மதயானையின் பிளிறல் கேட்ட சிங்கம் போல் எழுந்தான்.