பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272


வெற்றி வீரன் இராமன் அங்கதனை தூதின் விளைவைப் பற்றிக் கேட்டான்.

என்ன சொல்லி என்ன பயன்?

“இராவணனின் பத்து தலைகளும் மகுடங்களும் கீழே விழுந்தாலன்றி, நல்லறிவுக்குச் செவி சாய்க்கமாட்டான். தனக்குக் கேடு விளையுமென்று தெரிந்தும் திருந்தமாட்டான். விடாப் பிடியாகவே உள்ளான்” என்றும் சுருக்கமாகக் கூறினான்.

***

உற்றபோது - திரும்பி வந்தபோது; அவன் உள்ளக் கருத்து எலாம் - அந்த இராவணனது மனத்தில் உள்ள எண்ணங்களை எல்லாம்; உணர்த்து - தெரிவிப்பாய்; என்று கொற்ற வீரன் கூறலும் - என்று வெற்றி வீரனாகிய இராமன் கூறவும்;முற்ற ஓதிஎன்- முழுவதும் சொல்லி என்ன பயன்; மூர்க்கன் - விடாப்பிடி கொண்ட அந்த இராவணன்; முடித் தலை அற்றபோது அன்றி - கிரீடங்கள் பொருந்திய தலை அறுத்துத் தள்ளப்பட்டால் அன்றி; ஆசை அறான் - தன் மனத்துள்ள ஆசை நீங்கப் பெறான்; என்றான்.

***

அங்கதன் கூறியதைக் கேட்டான் இராகவன். இனி போரைத் தவிர்க்க முடியாது. நிகழ்த்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். வானர வீரர்களை அகழியைத் தூர்த்துக் கோட்டை மதிலை வளைக்க உத்திரவிட்டான்.

நான்கு வாயில்களிலும் அரக்கர் சேனை வந்தன. கடுமையாகப் பொருதன. வடக்கு வாயிலின் அரக்கப்படைத் தலைவன் வச்சிரமுஷ்டி. கடும் போருக்குப் பின் சுக்ரீவன் அவனைக் கொல்லவே, மற்றவர் அஞ்சி நகர் நோக்கி ஓடினர்.