பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274


பின்? முதல் நாள் போரின் இறுதியில் இராவணன் என்னவானான்?

***

ஒன்று நூற்றினோடு ஆயிரம்
        கொடுந்தலை உருட்டிச்
சென்று தீர்வில எனைப்பல
        கோடியும் சிந்தி
நின்ற தேரொடு இராவணன்
        ஒருவன் நிற்கக்
கொன்று வீழ்த்தினது
        இராகவன் சரம் எனும் கூற்றம்.

இராவணனை எதிர்த்து அம்பு மழை பெய்தான் தசரதனின் மகன். அந்த அம்புகள் எல்லா படை வீரர்களையும் வீழ்த்தி விடவே, இராவணன் தன்னந்தனியனாகத் தேருடன் நின்றான்.

***

இராகவன் - இராகவனுடைய; சரம் எனும் கூற்றம் - அம்பு என்ற யமன்; ஒன்று நூற்றினோடு ஆயிரம் - ஒரு நூறாயிரம்; கொடுந்தலை உருட்டி - கொடிய தலைகளை உருட்டி; சென்று தீர்வில - அதனோடு அமையாமல்; எனைப்பல கோடியும் சிந்தி - எத்தனையே பல கோடி வீரர்களையும் தலை சிந்தச் செய்து; நின்ற தேரொடு - நின்ற தேருடன்; இராவணன் ஒருவன் நிற்க - இராவணன் ஒருவன் மட்டும் தனியே நிற்க; கொன்று வீழ்த்தின - மற்றவர் எல்லாரையும் கொன்று வீழ்த்தியது.

***