பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தையும் இற்றது. குத்துச்சண்டையில் அநுமன் அவனை வென்றான்.

தங்கள் மாயையால் அரக்கர் அங்கதனையும் சுக்ரீவனையும், லட்சுமணனையும் வெவ்வேறு திசையில் ஈர்த்தனர். அநுமன் இளையவனைக் காணாது வேதனையுற்றான், என்றாலும் தன் அறிவாற்றலால் லட்சுமணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்.

“இவ்வரக்கப் போர் மாயத்தால் விளைந்திருத்தலால் மந்திரப்படை கொண்டுத்தான் போக்கவேண்டும்” என்ற தீர்வைக் கூறினான்.

லட்சுமணன் பாசுபத அத்திரத்தை விட்ட அக்கணமே மாயை மறைந்தது. மாயை விளைவித்த மகோதரன் என்ற அரக்கனும் மறைந்திட்டான். வானரர் இலட்சுமணனைக் கண்டனர்.

செய்தி அறிந்த இராவணன் அதை இந்திரசித்தினிடம் கூறுமாறு அனுப்பினான். மாயையினால் அரக்கர் தேவர் உருக்கொண்டு வந்தனர். லட்சுமணன் அதுகண்டு வியப்புற்றான். இந்திரசித்து பிரம்மாத்திரத்தை விட்டான். இந்திரன் உருக்கொண்டே இதைச் செய்தான். இளையவன் மூர்ச்சித்து விழுந்தான். இந்திரனாகத் தோன்றியவனைத் தண்டிக்க எழுந்த அநுமனையும் செயலிழக்கச் செய்தது அந்த அத்திரம். மற்றவரும் உயிரோடு சாய்ந்தனர்.

இது கண்ட இந்திரசித்து, “வானர சேனையுடனே இளையவன் இறந்தான்; இராமன் அகன்றிட்டான்” என்று வெற்றிச் சங்கு ஊதினான் குதூகலத்துடன்.

பூசை முடித்துவிட்டு வந்த அண்ணல் ஆக்கினேயாத்திரத்தினால் இருளைப் போக்கினான். சுக்கிரீவன் ஆகியோரைக் கண்டான். மயக்கமாகக் கிடந்த தம்பியைக் கண்டு புலம்பினான். அவனும் மூர்ச்சித்தான்.