பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

வழுவலின் மறையு முன்னால்
        வாழ்ந்தன வாகு மைந்த
பொழுதிறை தாழா தென் சொன்னெறி
        தரக் கடிது போதி.

“வாயு மைந்தனே! சிறிதும் தாமதியாமல் எல்லோரையும் உய்விக்கும் அருமருந்தைக் கொண்டு வந்தால், இராம இலட்சுமணன் மற்றும் எழுபது வெள்ளச் சேனையும் பிழைத்தெழும். எனவே நான் சொல்லும் வழியிலே சென்று அம் மருந்தினைக் கொண்டு வா!” என்றான் அநுமனிடம்.

***

மைந்த - மைந்தனே! (நீ மருந்து கொணர்வாயானால்); எழுபது வெள்ளத்தோரும் - எழுபது வெள்ளம் வானரச் சேனைகளும்; இராமனும் - இராமபிரானும்; இளையகோவும் - லட்சுமணப் பெருமாளும்; முழுவதும் இ உலகம் மூன்றும் - முழுதாகிய இந்த மூன்றுலகங்களும்; நல் அறம் மூர்த்தி தானும் - சிறந்த தரும தேவதையும்; வழுவல் இல் மறையும் - பழுதற்ற வேதங்களும்; உன்னால் வாழ்ந்தன ஆகும் - உன் உதவியால் அழியாது நிலைபெறுவன ஆகும்; ஆதலின், இறை பொழுது தாழாது - சிறிது காலமும் தாமதம் செய்யாமல்; என் சொல் நெறி தர - நான் சொல் வழிகாட்ட; கடிது போதி - விரைந்து எழுவாயாக.

***

“மருத்து மலையை விரைவிற் கொணர வேண்டும்” என்று சாம்பவான் சொன்னதைக் கேட்டவுடன், அநுமன் சாம்பவான் சொல்லிய வழியிலே பேருருக் கொண்டுச் சென்றான். விபீடணனும் சாம்பவானும் சென்று இரகுவீரனின் காலை வருடினர். இராமபிரான் கண்விழித்தான். தன்னைச் சார்ந்தோருக்கு ஏற்பட்ட நிலைக் குறித்து அண்ணல் வருந்தினான். அச்சமயம் சாம்பவான் அநுமன் உயிரளிக்கும் அரிய மருந்தைக் கொண்டுவரச் சென்றிருப்பதைக் கூறினான்; ஐயனைத் தேற்றினான். அப்போது,