பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம்
        அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர்
        ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் கேள்வியில்
        படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன்
        கவசமும், சேர்ந்தான்.

நீரருவிகளைக் கொண்ட கருநிற மலையிலே ஆயிரஞ் சூரியர் வேற்று உருவத்தோடும் வந்து உதித்தனரோ என்னும்படி ஒளிவிட்ட பொற்கவசத்தை தன் உடம்பிற் கட்டி அணிந்தான் இராவணன். இது பிரம்ம தேவனால் வேள்வியிலேயே தோற்றுவிக்கப்பட்டது. மற்றொரு கவசம் தேவேந்திரன் இந்திரசித்தினிடம் தோற்றபோது வெற்றி கொண்டவனுக்குத் தந்தான்(இராவணன்) ஒன்றின்மேல் ஒன்றாக இவ்விரு கவசங்களை அணிந்தான்.

***


அருவி அஞ்சனம் குன்றிடை _ அருவிகள் யாவும் கரிய மலையினிடையிலே; ஆயிரம் அருக்கர் - ஆயிரம் சூரியர்; உருவினோடும் - தம் உண்மைத் திருவுருவங்களுடன்; வந்து உதித்தனர் ஆம் என வந்து உதயமானார்கள் என்று சொல்லும்படி; ஒளிர - ஒளி வீச; நான்முகன் வேள்வியில் படைத்தது கருவி உம் - பிரமன் தான் இயற்றிய ஒரு வேள்வியில் உண்டாக்கியதான கவசத்தையும்; கட்டி - கட்டி; (அதன்மீது) செருவில் - போரில்; இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் - (தோற்றோடிய) இந்திரன் அளித்த பொன்னாலான கவசத்தையும சேர்த்துக் கட்டினான்.

***

கி. —20