348
மேலும் அக்கினி தேவன் கூறினான்; “சீதை கற்புக்கரசி, இவள் வெகுண்டு சாபமிட்டால் உலகமே அழிந்துவிடும்.” என்று கூறி பிராட்டியை இராமனருகிற் கொணர்ந்தான். அப்போது மூவுலகும் அன்னையை வாழ்த்தியது.
இராமன் என்ன செய்தான்?
***
அழிப்பில சான்று நீ யுலகுக்கு
ஆதலால்
இழிப்பில சொல்லி நீ இவளை
யாதுமோர்
பழிப்பிலள் என்றனை பழியும்
இன்றி இனிக்
கழிப்பிலள் என்றனன் கருணை
உள்ளத்தான்.
அருகில் வந்த அன்னையை கருணையுடன் நோக்கினான் கொடிய பகைவனுக்கும் கருணைக் காட்டிய அண்ணல். “நீ உலக சீவராசிகட்கு எல்லாம் நெறி பிறழாத சாட்சி ஆவாய். ஆதலால், சீதையின் கற்பின் திறத்தை உலகுக்கே உணர்த்தினாய்; இவள் ஒழுக்கம் குற்றமற்றது; பழி ஏதும் இல்லாததை உணர்த்தினாய். எனவே சீதை இனி நீக்கத் தக்கவள் அல்லள்!” என்று அக்கினியிடம் கூறி அன்னையை ஏற்றான்.
***
கருணை உள்ளத்தான் - அருளொடு கூடிய நெஞ்சினன் ஆன இராமபிரான்; நீ உலகுக்கு அழிப்பில சான்று - நீ உலகத்துச் சீவராசிகட்கெல்லாம்; (நெறி பிறழாத) சாட்சியாவாய் ஆதலால் - ஆதலின்; இழிப்பு இல - இகழ்வதற்கு இடமில்லாத; சொல்லி - உயர்ந்த மொழிகளைக் கூறி; நீ