பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



கோ இயல் தருமம் உங்கள்
        குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
        உருவத்தாய்; உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
        அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
        திகைத்தனை போலும் செய்கை.

சித்திரத்தில் எழுத முடியாத வடிவழகுடையவனே! உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் அரசு நீதி வழுவாதிருத்தல் உடைமையன்றோ? அங்ஙனமிருக்க நீ அந்த நீதி வழுவியது எவ்வாறு? உனது உயிருக்கு உயிரான தேவியை, சனகன் பெற்ற அன்னத்தைப் பிரிந்ததால் செய்யும் செயல் இதுவென்று அறியாது தடுமாறினாய் போலும்.

***

ஓவியத்து – சித்திரத்தில்; எழுத – எழுதுவதற்கு; ஒண்ணா – இயலாத; உருவத்தாய் – வடிவழகு உடையவனே; கோ இயல் தருமம் – அரச நீதி; உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம்; உடைமை அன்றோ – உரிய ஒன்று அல்லவோ? (அங்ஙனம் இருக்க நீ அரசு நீதி தவறியது எதனால்?) ஆவியை – உனது உயிருக்கு உயிரான; சனகன் பெற்ற அன்னத்தை – சனக மகாராசன் பெற்ற அன்னம் போன்றவளும்; அமிழ்தின் வந்த – அமுதம்போல் அருமையாகக் கிடைத்தவளும் (ஆகிய); தேவியை உனது மனைவியை; பிரிந்த பின்னை – பிரிந்த பிறகு; செய்கை திகைத்தனை போலும் – செய்யும் செயல் ஈதென்று அறியாது தடுமாறினாய் போலும்.

***