பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


அரக்கர் ஓர் அழிவு செய்து
        கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
        மனு நீதி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
        எப்பிழை கண்டாய்? அப்பா
பரக்கழி இது நீ பூண்டால்
        புகழை யார் பறிக்கற் பாலார்


அரக்கர் உனக்கு ஒரு தீங்கு செய்து சென்றால். அதற்காக மற்றொரு குரங்கினத்தின் அரசைக் கொல்லுமாறு மனு நீதி கூறிற்றா? இரக்கம் எங்கு போக்கினாய்? என்பால் என்ன குற்றம் கண்டாய்? அப்பா! இப்பெரும் பழியை நீ ஏற்றுக்கொண்டால் புகழை ஏற்பவர் எவர்?

***

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் – அரக்கர் உனக்கு ஒரு தீங்கு செய்து சென்றால்; அதற்கு – அதற்காக; வேறு ஒரு – வேறாகிய ஒரு; குரக்கு இனத்து அரசை – குரங்கு இனத்தின் அரசனை; கொல்ல – கொல்லுமாறு; மனுநீதி – மனு தர்மசாத்திரம்; கூறிற்று அன்றோ – கூறியது உண்டா? இரக்கம் எங்கு உகுத்தாய் – உனக்குரிய கருணையை எங்கே போக்கிவிட்டாய்? என்பால் – என்னிடம்; எப்பிழை கண்டாய் – என்ன குற்றம் கண்டாய்? அப்பா – நீ; பரக்கழி இது பூண்டால் – இந்தப் பெரும்பழியை ஏற்றுக் கொண்டால்; புகழைப் பறிக்கார் பாலர் யார்?– புகழை ஏற்பவர் எவர்? (எவருமிலர் என்றபடி.)

***