பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40



வாலியிடமும் இந்திரனின் தாமச குணம் நிரம்ப படிந்திருந்தன. இல்லாவிட்டால் எத்தனையோ வீராதி வீரர்கள் இருக்க, கொடியவனான இராவணனை உயிர்த் தோழனாக ஏற்றுக் கொள்வானா?

உண்மையில் நல்லவர்க்கே நண்பனாயிருந்தால், இராவணனின் படை வீரர்களான கரதூஷணாதிகளை தன் நாட்டின் அருகில் இருக்க இடந்தருவானோ?

இராவணன் சீதாபிராட்டியை அபகரித்துச் சென்ற விவரமும் அவன் அறிவான். அது அடாத செயல் என்பதும் உணர்வான். இராவணனுக்குப் புத்தி கூறினானா? இல்லை கண்டித்தானா? இல்லையே! இது குற்றமாகாதோ?

தசரதனை அவன் (வாலி) நன்கு அறிவான். சூரிய குலப்பெருமையும் அவன் அறிந்ததே. இராமபிரானின் தியாக உள்ளமும் அவனுக்குத் தெரிந்ததுதான். இருந்தும் கடமையைச் செய்ய தவறியது குற்றமல்லவா?

அது மட்டுமா? தம்பியை (சுக்ரீவனை) கொல்ல முயன்றான்.

தம்பியின் மனைவியை அபகரித்தான்.

இவை இரண்டும் கொடிய பாவங்கள். இந்த இரண்டிற்கும் நூல்கள் விதித்த தண்டனை யாது? கொலைத் தண்டனை.

எனவே வாலியை இராமன் கொன்றது நியாயமானது தானே.

வாலி மீண்டும் ஓர் சந்தேகம் கேட்டான். “தன்னை இராமன் ஏன் மறைந்திருந்து அடிக்கவேண்டும்” என்று.இதற்கு லட்சுமணன் விளக்கங்கூறி தெளிவுபடுத்தினான். வாலியைச் சூழ்ந்த மாயை அகன்றது. அவன் இராமனிடம் சரணடைந்து வரங்கள் சில கேட்டு பெற்றான்.

***