பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சீக்கிரத்தில் அரக்கர் தொல்லை நீங்கும் என்ற பெருமிதத்தால்.

அதே சமயம் வாலியும் முத்தியடைந்தான்.


பொன் மா மெளலி புனைந்து
        பொய் இலான்
தன் மானக் கழல்
        தாழும் வேளையில்
நன் மார்பில் தழுவுற்று
        நாயகன்
சொன்னான்; முற்றிய சொல்லின்
        எல்லையான்.

இவ்வாறு வேண்டிய பின் வாலி உயிர் துறந்தான். வாலியின் ஈமக் கடன்கள் முடிந்த பின் லட்சுமணனை அழைத்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு கட்டளையிட்டான் இராமன்.

சுக்கிரீவன் முடி சூடு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முடி சூடிக்கொண்ட சுக்கிரீவன் இராமன் அடி வணங்கினான். அப்போது இராமன் அரச நீதிகள் சிலவற்றை சுக்கிரீவனுக்கு அறிவுறுத்தினான்.

***

(சுக்கிரீவன்) பொன் மா மெளலி புனைந்து - பொன் மயமான சிறந்த கிரீடம் அணிந்து; பொய் இலான் தன் - பொய் புகலாத இராமனுடைய; மானக் கழல் - பெருமை பொருந்திய திருவடிகளில் வணங்கியபோது; நாயகன் - தலைவனும்; முற்றிய சொல்லின் - வேத வேதாந்தங்களின்; எல்லையான் - முடிவானவனும் ஆகிய இராமன்; நன் மார்பில் - தன் அழகிய மார்பில்; தழுவுற்று - அணைத்து; சொன்னான் - அரசு முறைகள் சிலவற்றைக் கூறினான்.

***