46
புகை உடைத்து என்னின், உண்டு
பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்
வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்குப்
பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தையாகி
இன் உரை நல்கு, நாவால்
மக்கள் மிகவும் நுண் அறிவு படைத்தவர்கள். புகை கண்டவிடத்தில் தீ உண்டு என்று ஊகித்து அறியும் இயல்புடையவர்கள். ஆகவே அத்தகைய ஐயப்பாடுகளுக்கு இடம் கொடாதே. வினயமாயிரு. உன் மீது பகை கொண்டு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உன்னிடம் வந்து பழகுவர் சிலர்.அவரை நீ இன்னாரென்று அறிந்துகொள். ஆனால் பகை பாராட்டாதே. அவரவர் பண்புக்கு ஏற்ப நடந்து கொள். எவரிடமும் ‘சிடு சிடு’ என்று சீறி விழாதே. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இரு. இனிய சொல் வழங்கு.
***
உலகம் - உலகத்து மக்கள்; புகை உடைத்து எனின் - எங்கே புகை உளதோ; அங்கு பொங்கு அனல் உண்டு- அங்கே தீ உளது; என்று உன்னும் - என்று கூர்ந்து கவனிக்கும்; மிகை உடைத்து - மிகுந்த அறிவுடையவர்கள்; நூலோர்-அரசியல் நூல் வல்லார் கூறுகிற; வினையமும் வேண்டற் பாற்றே - வினயமும் வேண்டாற் பாலதே; பகை உடை சிந்தையார்க்கும் - சிந்தையிலே பகை வைத்து உன்னிடம் பழகுவோரிடமும்; பயன் உறு பண்பில் -அவரவர் தகுதிக் கேற்ற பண்புடன்; தீரா - தொடர்ந்து நடத்தலுடன்; நகை உடை முகத்தையாகி - சிரித்த முகத்துடன்; நாவால் இன் உரை வழங்கு - நாவினால் இனிய மொழிகளே கூறுவாயாக,