47
செய்வன செய்தல்; யாண்டும்
தீயன சிந்தியாமல்
வை வன வந்தபோதும்
வசை இல இனிய கூறல்
மெய் சொலல்; வழங்கல் யாவும்
மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு
உயர்வன உவந்து செய்வாய்.
எவர்க்கும் தீங்கு செய்யாதே.அதே சமயத்தில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்தல் தவறாதே. உன்னைப் பற்றிப் பிறர் கூறும் வசை மொழிகளை எவர் வந்து கூறிய போதிலும் பதில் வசை கூறாதே, வசை இல்லாத இனிய சொற்களே கூறுவாய். உண்மையே பேசு.வழங்குதற்குரிய பொருள்களை வழங்கு. பிறர் பொருள் கவர நினையாதே. இந்தப் பண்புகள் உன்னை உயர்த்தும். எனவே இவை செய்வாய்.
***
யாண்டும்-எவர் மாட்டும்; தீயன சிந்தியாமல் - தீங்கு செய்ய நினையாமல்; செய்வன செய்தல்-செய்யவேண்டியவற்றைச் செய்தலும்; வைவன வந்த போதும் - பிறர் கூறும் வசை மொழிகளை எவர் வந்து கூறிய போதிலும்; வசை இல - வசை இல்லாத ;இனிய கூறல்- இனிய சொற்களே கூறுதலும்; மெய் சொலல் - மெய்யே பேசுதலும்;யாவும் வழங்கல்- வழங்குதற்குரிய பொருள்களை எல்லாம் வழங்குதலும்; மேவின வெஃகல் இன்மை-பிறர் பால் பொருந்திய பொருள்களைப் பறிக்க நினையாமையும்; (ஆகிய இச்செயல்கள்) உய்வன ஆக்கி - உயிர்கள் நல்நிலை பெறச் செய்து;தம்மோடு உயர்வன - அவ்வுயிர்களோடு தாமும் உயர்வன ஆகும்; உவந்து செய்வாய் - ஆகவே இவற்றை நீ விரும்பிச் செய்வாயாக.