பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48



நாயகன் அல்லன்; நம்மை
        நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணத்
        தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும்
        அறவரம்பு இகவா வண்ணம்
தீயன வந்தபோது
        சுடுதியால் தீமையோரை

இவன் நமது அரசன் அல்லன். நம்மைப் பெற்று எடுத்து அன்பு பாராட்டி வளர்க்கும் தாய் என்று உனது குடிமக்கள் உன்னை ஆதரிக்க வேண்டும். அந்த வகையில் அவர்களை நீ பாதுகாப்பாய். அவ்விதம் இருப்பினும் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமை செய்தோரை தண்டிக்கத் தயங்காதே. அறத்தின் வழிநின்று தண்டிப்பாய்.

***

நாயகன் அல்லன் - இவன் நமது அரசன் அல்லன்; நம்மைப் பயந்து - நம்மைப் பெற்று; எடுத்து நனி நல்கும் - எடுத்து வளர்த்து நன்றாகப் பாதுகாக்கும்; தாய் என - தாய் என்று;இனிது பேண-மக்கள் இனிமையாக உன்னை விரும்பும் வண்ணம்; தாங்குவாரைத் தாங்குதி - பாதுகாக்கத் தக்கவரைப் பாதுகாப்பாயாக; ஆயது தன்மையேனும் - அவ்வாறு செய்வதை உனது கொள்கையாகக் கொண்ட போதிலும்; தீயன வந்தபோது - அவர்களில் எவரேனும் நாட்டிலே தீங்கு செய்தால்;தீமையோரை - அத்தீங்கு செய்வோரை;அறம் வரம்பு இகவா வண்ணம் - அறத்தின் எல்லை கடவாதபடி; சுடுதி - தண்டிப்பாயாக!

***