57
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை
அகத்து வைத்தான்
ஏகு மின் காண்டிர் ஆங்கே இருந்தனள்
இறைவி இன்னும்
சம்பாதியைத் தேற்றினான் அநுமன். பின்னர் சம்பாதி “சர்க்கரை பாகு போன்ற இனிய சொற்களையுடைய சீதையை, மகா பாதகனான அரக்கன் இராவணன் இலங்கைக்கு எடுத்துச் சென்று சிறை வைத்துள்ளான்” என்றான்.
***
“சீதை, வேதனையால் வேகும் உள்ளத்தை உடையாள். பிராட்டியை நீங்கள் இப்போதே சென்று காணுங்கள்” என்றான்.
பாகு ஒன்று குதலையாளை - இனிய பாகு போன்ற (மிக இனிய) மழலை சொற்களை உடையவளாகிய சீதை; பாதகன் அரக்கன் பற்றிப் போகின்றபொழுது - பெரும் பாவியான இராவணன் கவர்ந்து சென்றபோது; கண்டேன் - பார்த்தேன்; இலங்கை புக்கனன் - (அந்த இராவணன்) இலங்கையிற் சேர்ந்தான்; புக்கு - அவ்வாறு சேர்ந்து; வேகின்ற உள்ளத்தாளை வெம்சிறை அகத்து வைத்தான் தவிக்கின்ற மனமுடையவளாகிய அந்தச் சீதையை கொடிய சிறைக்காவலில் வைத்திட்டான்; இறைவி இன்னும் ஆங்கே இருந்தனள் - சீதா பிராட்டி இப்போதும் அங்கேயே இருக்கிறாள். ஏகுமின் காண்டிர் - (நீங்கள்) அங்குச் சென்று காணுங்கள் என்றான் சம்பாதி.
***
சம்பாதி இலங்காபுரிக்குச் செல்லும்போது உள்ள சங்கடங்களை விரிவாகக் கூறுகிறான். வழியிலே பெரிய கடலுண்டு. கடல் நூறு யோசனை உள்ளதாம். இராவணனோ மிகக் கொடியவன் அவனுடைய கொடுமை, இலங்கையை இன்னும் அணுக முடியாதபடி செய்கிறது.