பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75




கண்டனன் இலங்கை மூதூர்
        கடிபொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும் கொற்ற
        வாயிலும் மணியிற் செய்த
வெண்தளக் களப மாட
        வீதியும் பிறவும் எல்லாம்
அண்டமும் திசைகள் எட்டும்
        அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.

இலங்கை என்ற மிகப்பழம் பெருநகரின் மாடமாளிகைகளையும், வெண்மையான சுண்ணாம்பு தீட்டப்பட்ட மாடங்கள் கொண்ட வீதிகளையும் வெற்றிக், கோபுரமும் கண்டான் அநுமன்; மகிழ்ந்தான்; அம் மகிழ்ச்சியிலே அண்ட கோளங்களும் அஷ்ட திக்குகளும் அதிரத் தோள் கொட்டி ஆரவாரம் செய்தான்.

***

இலங்கை மூதூர் - இலங்கை என்ற பழமையான நகரத்தின்; கடிபொழில் - காவல் உள்ள சோலைகளையும்; கனக நாஞ்சில் - பொன்னாலான மதில் பகுதிகளையும்; மண்டல மதிலும் - வட்டமான கோட்டைச் சுவர்களையும்; கொற்ற வாயிலும் - வெற்றிக் கோபுர வாசலையும் ; மணியில் செய்த - மணிகள் பதிக்கப் பெற்ற வெண்தள களப மாட வீதியும் - வெண்மையான சுண்ணாம்பு தீற்றிய மாடங்களை உடைய வீதிகளையும்; பிறவும் எல்லாம் - மற்றும் பிறவற்றையும்; கண்டனன் - அநுமன் கண்டான்; அண்டமும் திசைகள் எட்டும் அதிர - (கண்ட அவன்) அண்டங்களும் எட்டுத் திசைகளும் அதிரும்படியாக, தோள் கொட்டி ஆர்த்தான் - தன் தோள்களைக் கொட்டிக் கொண்டு ஆரவாரம் செய்தான்.