பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76




வால் விசைத்து எடுத்து, வன்தாள்
        மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத் துணைகள் பொங்கக்
        கழுத்தினைச் சுருக்கித் தூண்டிக்
கால் விசைத்து இமைப்பில்லோர்க்கும்
        கட்புலன் தெரியா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான் உச்சி
        விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்.

மகேந்திர மலையிலே நின்று கொண்டு வானுற வோங்கி இலங்கை மாநகரைக் கண்ட அநுமன், கடலைத் தாண்டி அவ் இலங்கை சேரும் பொருட்டு வாலை வேகமாக வீசினான்; தனது வலிய கால்களை ஒடுக்கிக் கொண்டான்; மார்பை ஒடுக்கினான்; கழுத்தை உள்ளுக்கு இழுத்து முன்னே தள்ளி காற்று போல வேகத்தை வருவித்துக் கொண்டான்; வானத்திலே வெகு உயரமாகப் பாய்ந்தான்.

***

வீரன் - அநுமன்; வால்விசைத்து எடுத்து - வாலை வேகமாக வீசி; வன்தாள் மடக்கி - வலிய கால்களை மடக்கி; மார்பு ஒடுக்கி - மார்பை ஒடுக்கிக் கொண்டு; மான - பெரிய; விசை - வெற்றியுடைய; தோள் துணைகள் - இரு தோள்களும், பொங்க - பூரிக்க; கழுத்தினை சுருக்கி தூண்டி - கழுத்தினை உள்ளுக்கு இழுத்து முன்னே தள்ளி; கால்விசைத்து - காற்றுப் போல வேகத்தை உண்டாக்கி; இமைப்பு இல்லோர்க்கும் - கண் இமையாத தேவர்கட்கும்; கட்புலம் தெரியாவண்ணம் - கண்பார்வைக்குத் தெரியாத படி; மேல்விசைத்து - மேல் நோக்கி வேகம் எடுத்து; உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச - பிரம்மலோகம் போய் உராயும் வண்ணம்; எழுந்தான் - வானத்தே எழுந்தான்.