பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

151

மேல்நாட்டு இலக்கியங்களை, காவியங்களை அந்த அந்த பாஷைகளின் மூலமாகவே அறிந்து அனுபவித்த ஸ்வர்கீய வ.வே.சு அய்யர் அவர்கள் “ஒரு பெருங் காப்பியம் அநேக அவயவங்கள் சேர்ந்ததாய் இருப்பினும் ஒரு ஜீவ பிராணியைப் போல ஒரு தனிப்பிண்டமாக இருத்தல் வேண்டும். தலை இடை கடை என்ற பாகுபாடும் அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்ற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயவமும் தான் தனக்கு முன்னேயுள்ள அவயவத்தோடும் பிணைக்கப்பட்ட ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இந்த இலக்கணத்தை வைத்துக் கொண்டு கம்பன் காவிய நிர்மாணத்தை ரசனையை நோக்கினால் அவன் காவியம் உன்னத இலக்கியமாகவே நிற்கும்.

கம்பனது காவியத்திலே பிரதான சம்பவம ராவண வதம. பாலகாண்டம் காவிய சம்பந்தத்தோடு அவயவசம்பந்தம் இல்லாது சற்று ஒதுங்கியே நிற்கிறது. காவிய மாளிகையின் முன்வாசல் பூஞ்சோலைதான் அது. இராமன் சீதா லக்ஷ்மண ஸமேதனாய் காட்டுக்குப் புறப்படுவதிலேதான் ராவண வதத்திற்கு விதை விதைக்கப்படுகிறது. அயோத்தியா காண்டத்தைத் தொடங்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காப்பு பாட்டிலேயே இதைக் காட்டுகிறான்.

வான் நின்று இழிந்த வரம்பு இகந்த
மாபூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வு போல்
உள்ளும் புறத்தும் உளன் என்ப
கோனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் காத்த கழல் வேந்தே.