பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

கம்பன் சுயசரிதம்

என் கொண்டு இயற்றிய
     எனத் தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு
     மதி முட்டுவனமாடம்

என்று பாடுகிறான். பொன், மணி, மின், வெயில் இவைகளால் ஆக்கப்பட்ட மாளிகைகள்தான் லங்கா நகரத்தில் உள்ள மாளிகைகள். ஆனால் இவைகளையெல்லாம் விட இன்னும் பிரகாசமான பொருளாலும் இம்மாளிகைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி அதிபிரகாசமான பொருள் என்ன என்பதை பௌதிக சாஸ்திரம் இன்னும் கண்டுபிடித்தாகவில்லையே என்று எண்ணிக்கொண்டேதான், “என் கொண்டியற்றிய எனத் தெரிகிலாத” என்று கம்பன் தன் வர்ணனைக்கு முத்தாய்ப்பு வைக்கிறான்.

இதுபோலத்தான் கம்பன் தனது காவிய மாளிகையை கவிதா மேதைமையினாலும் சிற்பியின் திறமையினாலும் நாடகப் பண்பினாலும், கட்டி முடித்திருக்கிறான் என்று மட்டும் கூறிவிட்டால் அது அவனது காவிய மாளிகையைக் கட்டுவதில் கையாண்ட முறைகளை முற்றிலும் விளக்கியதாகாது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, ஒரு தெய்வீக அமானுஷ்யமான சக்தி ஒன்று கம்பனிடம் இருந்திருக்கிறது. அந்த சக்தியின் துணைகொண்டே இந்தக் காவிய நிர்மாணம் செய்திருக்கின்றான். கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்புடன் அம்மாளிகையும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது நம்முன்னே. ஆனால் அந்த சக்திதான் என்ன என்று சொல்ல முடியவில்லை. என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத என கம்பன் சொன்ன படியே நானும் கையைத்தான் விரிக்க வேண்டியிருக்கிறது.

❖❖❖