பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

27


நான் – ரொம்ப சரி. நீங்கள் காவியம் எழுதியது, அதை அற்புதமாக ஆக்கியதெல்லாம் சரி. நீங்கள் அந்த வான்மீக முனிவரது கவிதை உணர்ச்சியிலே அவ்வளவு அழகாக ஒன்றியிருக்கிறீர்கள். அவர் புகழைப் பரப்புவதற்கு தக்க கருவியாய் அமைந்திருக்கிறீர்கள். நல்ல கவிஞர் புகழைப் பரப்புவது மற்றொரு கவிஞரின் பணி தானே.

கம்பன் – என்ன தம்பி ஆழம் பார்க்கிறாய். நான் வான்மீகரது புகழைப் பரப்புவதற்காகவே காவியம் எழுதினேன் என்கிறாயா? அதிலும் உண்மை உண்டு. அந்தக் கவிஞரின் பேரில் அவன் இயற்றிய அந்தக் காசில் கொற்றத்து இராம கதையின் பேரில் ஒரு ஆசை பற்றி இழுக்கத்தான் செய்தது. அந்த வான்மீகிதான் என்ன சாமானியமானவனா? வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவன் அல்லவோ? தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தவன் அல்லவோ? ஆனால் இதற்கெல்லாம் மேலாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் வேறொரு ஆசையும் இருக்கத்தான் செய்தது தம்பி! தமிழர்களெல்லாம் தலைதூக்கி நிற்கச் செய்த அன்பன், அறிஞன், கவிஞன் அந்த வள்ளுவன்தான். அவனைத் தானே அன்று முதலே பொய்யில் புலவன் என்று பாராட்டியிருக்கிறோம். அவன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிகளை எல்லாம் திறம்பட வகுத்துவிட்டான். அவன் வகுத்த வழிகளை எல்லாம் ஒரு நல்ல கதை உருவத்தில் இந்த தமிழர்களுக்குக் கொடுத்தால் அந்த அறவுரைகளிலே ஒரு கவர்ச்சி தோன்றாதா என்ற ஆசையும் உண்டு எனக்கு. ஆதலால்தான் அவன் சொன்ன அறநெறிகளுக்கு விளக்கம் தரும் வகையிலே இந்தக் காவியம் எழுதினேன். இதைக் குறிப்பாகவும் முதலிலேயே உணர்த்தியும் இருக்கிறேன்.

“பொய்யில் கேள்விப் புலமையினோர். புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

என்று