பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

33


என்பதுதானே நான் கனவு கண்ட கோசலம். இத்தகைய நாட்டிலேதான் ராமராஜ்யம் நிலவும் என்று எண்ணினேன். அந்த ராஜ்யத்தில்

ஏகம் முதற் கல்வி முளைத்து
எழுந்து எண்ணில் கேள்வி
ஆகம் முதல் திண்பனை போக்கி
அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித்
தருமம் மலர்ந்து
போகம் கனியொன்று பழுக்கும்.

என்று துணிந்து கூறினேன். இந்த ராஜ்யத்தின் அரசன் அல்லது ஆள்வோர் மன்னுயிரையெல்லாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பி அந்த உயிர் எலாம் உறையும் ஓர் உடம்புபோல் இருத்தல் வேண்டும் என்று அறுதியிட்டு உரைத்தேன். வையகம் முழுதும் வறிஞன் ஒம்பும் ஓர் செய் எனக்காத்து இனிது அரசு செய்தால் ராமராஜ்யம் நின்று நிலவும் என்று நம்பினேன்.

இப்படி ராமராஜ்யம் நடக்கும் நாட்டில்தான் மக்களுக்கு இறை உணர்ச்சி உண்டாகும். இறை உணர்ச்சி தெய்வ நம்பிக்கை எல்லாம் ஏற்பட, நாட்டில் கோயில்கள் பல தோன்றவேண்டும். அங்கெல்லாம் வழிபாடுகள் முறையாக நடக்க வேண்டும். புதுக் கோயில்கள் கட்ட முடியாவிட்டாலும் அந்தப் பழைய செட்டிநாட்டு அன்பர்களைப் போல் பழைய கோயில்களை எல்லாம் புதுக்கிப் பணிபுரிய வேண்டும் என்றெல்லாம் கூறினேன்.

“ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க, சந்தியும்
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தீபமும் வழங்குக"