பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கம்பன் சுயசரிதம்

என்று வாயாரப் பாடி நாவாரத் துதித்து, சீதையை ஒரு சௌந்தர்ய தேவதையாகவே ஆக்கிவிடுகிறான். சௌந்தர்ய தேவதையை அத்துடன்விட்டானா அவன்? அவளுக்கு அழகான கோயிலையும் கட்டிக் கொடுத்து, அதில் அந்தத் தேவதையைப் பிரதிஷ்டை செய்துவிட்டான். ஆழியாகிய அகழி, இலங்கையாகிய மதில், அதனுள் அசோகவனமாகிய கோயில், கோயிலுள், இலக்குவன் கட்டிய பர்ணசாலையாகிய கர்ப்பக்கிருகம். அதனுள் தவமும் தவஞ்செய்து பெற்ற சௌந்தர்ய தேவதை கோயில் கொள்ளுகிறாள்.

“வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார், விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச்
சோலை, அங்கு அதனுள் உம்பி புல்லினால தொடுத்த தூய
சாலையுள் இருந்தாள் ஐய, தவம் செய்த தவமாம் தையல்”

என்று கம்பர் சௌந்தர்ய தேவதைக்குக் கட்டிக்கொடுக்கும் கலைக்கோயிலையும், ராஜராஜன் பெருவுடையாருக்குக் கட்டிக்கொடுத்திருக்கும் கலைக்கோயிலையும் ஒப்பிட்டு நோக்கினால் அவற்றின் ஒப்புமை தெரியும். இல்லாவிட்டால் முந்தையோர், செய்யுள் போல் செய்த திருக்கோயில் என்று தெரியாமலா பாடி வைத்தார்கள்?

கம்பன் பாட்டைப் படித்து ராஜராஜன் கோயிலைக் கட்டினானா? அல்லது ராஜராஜன் கலைக்கோயிலைப் பார்த்துக் கம்பன் கவி அமைத்தானா? அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியவர்கள் சரித்திர ஆசிரியர்கள். கம்பனையும் கலையையும் நாம் அனுபவித்தால் போதும். ராஜராஜன் கோயிலையோ அல்லது அதனுள் கோயில் கொண்டிருக்கும் பெருவுடையாரையோ கண்டு தமிழர் பலர் தலை வணங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த அரிய கலைக்கோயிலை அமைத்த தெய்வத் தச்சன், மகாகவி கம்பன் சந்நிதியிலே தமிழர் எல்லோரும் தலைதாழ்த்தித்தான் நிற்கிறோம்.