பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கம்பன் சுயசரிதம்

சுந்தர மணிவரைத்
   தோளுமே, அல;
முந்தி என் உயிரை
   அம்முறுவல் உண்டதே

என்பதுதானே சீதையின் கூற்றாகக் கம்பன் சொல்வது. காதலுற்ற கன்னி சீதை கண்வழி நுழைந்த கள்வனாம் ராமனது அழகில் ஈடுபட்டு நின்றது வியப்பில்லை. பின்னர் ராமன் மிதிலை நகரிலே உலாவந்தபோது, வீதி வீதியாய் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம் தலைவாயிலுக்கு ஓடி வந்து ராமனைக் காணுகிறார்கள். ராமனது அழகு அவர்களை எப்படி வசீகரிக்கிறது? சிலர் அவன் தோளைப் பார்த்தார்கள்; சிலர் தாளைப் பார்த்தார்கள் தோளைப் பார்த்தவர்கள் தோளில் பதிந்த பார்வையை வேறு திருப்ப முடியாது தவித்தார்கள். தாளைப் பார்த்தவர்களும் தடக்கையைப் பார்த்தவர்களும் அப்படி அப்படியே. இப்படியே ஒருவராலும் அவனது வடிவம் முழுவதையும் கண்டுகளிக்க முடியாமலே போய் விடுகிறது. ஒவ்வொரு அங்கமுமே அத்தனை வசீகரம் என்றால், முழுவடிவினையும் எப்படி என்று சொல்ல?

தோள் கண்டார் தோளே கண்டார்;
   தொடுகழல கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
   தடக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே
   வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்

என்பது பிரபலமான பாட்டாயிற்றே. அடடே இந்த சௌந்தர்ய ஈடுபாட்டை வைத்துக்கொண்டு, சமயவாதிகள் ஒவ்வொருவரும் இறைவனது திருஉருவில், ஒவ்வொரு அம்சத்தையே காண்கிறார்கள் என்ற அற்புத உண்மையைக் கூட அல்லவா கவிச்சக்கரவர்த்தி எளிதாக விளக்கிவிடுகிறான்.