பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

65

செந்தாமரைக் கண்ணொடும்,
   செங்கனி வாயினோடும்,
சந்து ஆர்தடந் தோளொடும்,
   தாழ் தடக்கைகளோடும்
அம்தார் அகலத் தோடும்
   அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும்
   அவ்வல் வில் இராமன்

என்கிறாள். ராமனது அழகை எல்லோரையும் விட, நன்றாக அனுபவித்தவள் (கவிச் சக்கரவர்த்தி கம்பன் சொற்படி) சூர்ப்பனகை என்று சொன்னால் வியப்பில்லைதான்.

இந்த கருநிறக் கமலக் கண்ணன் போர் செய்யப் புறப்பட்டாலும் அதிலுமே ஒரு அழகு. ‘சரன் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்து, தள்ளா உரன்படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஈர்த்து’ அவன் போருக்கு எழும் காட்சியும் அழகாகவே இருக்கிறது. இப்படியே இருந்தால், எழுந்தால், நடந்தால், கிடந்தால் எல்லாம் ராம சௌந்தர்யம் வளர்ந்துகொண்டே போகிறது. இன்னும், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எல்லோருமே ராமனது அழகில் ஈடுபட்டு நிற்கிறார்கள். இப்படி ஒரு ராமனை, அந்தமில் அழகனை உருவாக்கிய கம்பன் கடைசியில் தானுமே அவன் அழகில் ஈடுபட்டு மெய்மறக்கிறான். ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தான்’ என்பான் ஒருதரம். ஆடவரும் பெண்மையை அவாவுவர் அவன் தோள்களை அணைய என்பான் மறுதரம். இதனால் எல்லாம் திருப்தி அடையாது

வெய்யோன் ஒளிதன் மேனியின்
   விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்
மையோ! மரகதமோ! மழைமுகிலோ
   ஐயோ! இவன் வடிவு என்பதுஓர்
அழியா அழகுடையான்