பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கம்பன் சுயசரிதம்

மடிகிறார்கள். ஏன்? விபீஷணனே ராவணன் இறந்து வீழ்ந்ததும்,

உண்ணாதே உயிர் உண்ணாது
ஒரு நஞ்சு ஜானகி எனும்
பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே
போக்கியதே உயிர் நீயும்
களப்பட்டாயே

அண்ணாவோ! அண்ணாவோ! என்று அலறுகின்றானே. ஆதலால் ராமவீரத்திற்குத் துணை நின்றது சீதையின் கற்பும்கூடத்தான் என்றும் சொல்லலாமே’ என்கிறார் ஆராய்ச்சி அறிஞர். சொல்லலாம்தான். ராமனிடம் அமைந்திருந்த வீரம், சீதையின் கற்பு காத்த வீரம். ஏன் அறம் நிலைநிறுத்திய வீரம் என்றெல்லாம் விரித்தாலும் வீரம் வீரம் தானே. ஆகவே, அந்த வீரம் விளைத்த வீரனுக்கே நமது அஞ்சலி.

உத்தமபுருஷன் - இராமன்

வான்மீகி முனிவரைக் காண நாரதர் ஒருநாள் வருகிறார். சண்டைகளை ஆரம்பித்து வைப்பவரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவரும் நாரதர்தானே. அதனால் நாரதரிடம் தன் சந்தேகங்கள் தீர வான்மீகர் கேட்கிறார். இந்த நிலவுலகத்திலே பிறந்தவர்களுள்ளே சிறந்த வீரியவான் யார்? சிறந்த குணவான் யார்? நல்ல தருமம் அறிந்தவன் யார்? நன்றி அறிதல் உள்ளவன் யார்? சத்தியமே உரைப்பவன் யார்? திடமான விரதம் உள்ளவன் யார்? என்று அடுக்கிக் கொண்டே போகிறார். நாரதர் அவரை இடைமறித்து இத்தனை கேள்விக்கும் பதில் ஒன்றுதான். வீரமும் குணங்களும் நிறைந்தவன் ராமன், சத்திய சந்தன் ராமன், தருமம் உணர்ந்தவன் ராமனே என்று கூறிவிடுகிறார். அத்தகைய சகல குண சம்பன்னனாகவே ராமன் உருவாகியிருக்கிறான்.