பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

77

நதியின் பிழை அன்று
    நறும் புனல் இன்மை; அற்றே
பதியின் பிழை அன்று
    பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
    மகன் பிழை அன்று, மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
    என்கொல் வெகுண்டது

என்றுதானே சமாதானம் கூறுகிறான். மனிதனாய்ப் பிறந்தவனிடத்து, சக்கரவர்த்தித் திருமகனாக வாழ்ந்தாலும், விதி தன் வலியைக் காட்டியே தீரும் என்பதில் தான் இந்த ராமனுக்கு எவ்வளவு நம்பிக்கை.

ராமன் எப்படி ஆட்சி செய்தான் என்பதை கவிஞனுக்குக் கூற வாய்ப்பு இல்லை. காவியம் பட்டாபிஷேக மகோத்ஸவத்தோடேயே நின்றுவிடுகிறது. ஆனால் கவிச் சக்கரவர்த்தி, ராமராஜ்யம் எப்படி இருந்திருக்கும் என்று நாமெல்லாம் கற்பனை பண்ண உதவியிருக்கிறான். நல்ல அறத்தை அடிப்படையாகக் கொண்டே ராஜ்யபாரம் நடந்திருக்கவேணும். ‘ஆற்ற நல் அறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை.’ அந்த ராம ராஜ்யத்தில் வறுமை இன்மையால் வண்மையே இல்லை. பலரும் கல்வி கேள்விகளில் உயர்ந்திருந்ததால், ஒள்ளிய அறிவு படைத்தோர் என்ற கூட்டமே அங்கு இல்லை என்கிறான் கவிஞன். திருடும் கள்ளர்களே இல்லாததால், காவல்காரர்களே வேண்டியிருக்கவில்லை. கொடுப்பதை ஏற்கப் பிச்சைக்காரர்களே இல்லாததால், தானம் கொடுப்பவர்களுமே இல்லை என்கிறான். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல்

கல்லாது நிற்பார் பிறர்
இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை, அவை
வல்லர் அல்லாரும் இல்லை