பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கம்பன் சுயசரிதம்

எல்லோரும் எல்லாப் பெருஞ்
   செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்
   களும் இல்லை மாதோ

என்று இன்றைய சோஷலிச சமுதாயத்தையே உருவாக்கிக் காட்டுகிறான். அப்படியெல்லாம் ராமராஜ்யம் நடக்கும், நடந்திருக்க வேணும் என்றே கோடி கோட்டுகிறான். ராமனைப் போன்ற உத்தம புருஷனது ராஜ்யத்தில் இப்படி வசியும் வளனும் நிறையாது பசியும் பிணியுமா இருக்கும் என்றெல்லாம் நம்மை எண்ண வைக்கிறான்.

ராமன் புருஷ உத்தமன்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றானே அது உத்தமன் செயல்தானா? என்று ஒரு கேள்வி. ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னதான் தத்துவங்களை எல்லாம் விளக்கி, இராமனுக்குச் சப்பைக் கட்டு கட்டினாலும், வாலிவதம் அவனுக்கு ஒரு தீராத வசையே. ஆனால் நான் சொல்லுவேன் இது ஒன்றே அவனை மனிதனாகக் காட்டுகிறது. அப்பழுக்கே இல்லாத ஒரு மனிதனைக் காட்டி இருந்தால் நாம் நம்பியே இருக்க மாட்டோம். எல்லா நல்ல குணங்களும் நிறைந்த மனிதன் வழுக்கி விழுகிறபோதுதான் அடே, இவன் ஒரு மனிதன்தான் என்ற உணர்ச்சி வருகிறது. அந்த உணர்ச்சியை உருவாக்கவே இந்த வசை உள்ள காரியத்தையுமே அவன் செய்கிறான்.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொன்னவன் வள்ளுவன். அந்த வள்ளுவன் காட்டிய வழியில் நின்றவன் ராமன். அந்த ராமன் புகழைப்பாடி, பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வமாக் கவிமாட்சி தெரிக்கச் செய்தவன் கம்பன்.